வேலூரில் இன்று அடுத்தடுத்து தி.மு.க பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், அமைச்சர் துரைமுருகன், எம்.பி.கதிர்ஆனந்த் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் ரூ.10.57 கோடி பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக, அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏறக்குறைய 200 ஏக்கரிலான அரசுப் புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தனியாருக்கு விற்பனைச் செய்துவந்த குற்றச்சாட்டிலும் சிக்கினார் பூஞ்சோலை சீனிவாசன். தொடர்ந்து இவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ரேடாரில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது. எக்காரணத்திற்காக இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
காட்பாடி காந்திநகரிலுள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்படுகிறது. தற்பொழுது இந்த வீட்டில் அவருடைய மகன் கதிர்ஆனந்து வசித்து வருகிறார்.
2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
