Minister Thangam Tennarasu,
நாளை த.வெ.க.தலைமை விஜய் அவர்கள் பரந்தூருக்கு வருகை தர இருக்கும் சூழலில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ‘விமான நிலையங்கள் உருவாக்குவது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதென’ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தச் சூழலை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு இடையேயும் போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருக்கும் விலை நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க முன்வருவதாக இல்லை.
இதற்கு இடையில் நாளை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அப்பகுதிக்கு நேரில் வருகைத் தந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்திக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பே செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து நாளை காஞ்சிபுரம் அடுத்துள்ள மேல் பொடவூரில் அமைந்துள்ள ‘வினஸ் ரிசாட் திருமண மண்டபத்தில்’ விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. காஞ்சிபுரத்திலும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று லேசான மழை விட்டுவிட்டு பெய்துவருவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சூழலில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விமான நிலையங்கள் உருவாக்குவது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதென இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களின் அளவோடு ஒப்பிடும் பொழுது சென்னை விமான நிலையம் மிகவும் சிறியதாக 1300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக மட்டுமே இருக்கிறது. இப்படி சிறிய பரப்பளவில் இருக்கும் சென்னை விமான நிலையத்திலேயே ஏராளமான மக்கள் பயணத்திற்காக வருகின்றனர். இனிவரும் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும் நிலை உள்ளது.
மேலும் சென்னையில் இருக்கும் விமானநிலையத்தின் பரப்பளவை அதிகரிக்க முடியாது. ஏனெனில் சென்னையைச் சுற்றி நகர்புறங்கள் உருவாகிவிட்ட காரணத்தால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை ஒன்றும் செய்யமுடியாத சூழல் இருக்கிறது. அதனால் நம் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் பரந்தூர் விமான நிலையம் அவசியமாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெருகிவிட்ட நகர்புற குடியிருப்புகளை ஒன்றும் செய்யமுடியாத நிலையில் பரந்தூர் பகுதியில் வாழும் விவசாய குடிகளின் வாழ்வாதாரமான நிலப்பகுதியை அழித்து அப்பகுதியில் விமான நிலையம் உருவாக்குவத்தை செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தி பேசும் அமைச்சரின் பேச்சும், நாளை அப்பகுதிக்கு வந்து போராட்டக் குழுவினரை சந்திக்க இருக்கும் த.வெ.க. விஜய் அவர்களின் சந்திப்பும் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமோ..? என்ற எதிர்ப்பார்ப்பு இப்பகுதி மக்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.
