Supports the people's protest
த.வெ.க.தலைவரும் நடிகருமான விஜய் பரந்தூர் விமானநிலையம் எதிர்ப்பு குழுவினரைபிற்பகல் 12.30 மணியளவில் சந்தித்தார்.
பொடவூரில் அமைந்துள்ள ‘வினஸ் ரிசாட் திருமண மண்டபத்தில்’ விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு – உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்- தான் வந்த வாகனத்தில் இருந்தப்படியே தனது ஆதரவை போராட்டக் குழுவினருக்கு அவர் தெரிவித்தார்.
உங்களில் ஒருவனாக ஒரு சிறுவன் பேசியதைக் கேட்டது முதல் என் எண்ணம் உறுதியானது. இங்கிருந்துதான் எனது களப்பணியைத் தொடங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் உங்களைச் சந்தித்து உங்களுக்காக உடன் நின்று என் களப்போராட்டத்தை தொடங்க இருக்கிறேன்.
இயற்கை வளப்பாதுகாப்பு, சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையிலான எந்த திட்டத்தையும் நாம் அனுமதிக்க முடியாது; விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை குறித்தான தீர்மானத்தை முதல் மாநாட்டிலேயே குறிப்பிட்டேன். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தியேன். அதே நிலைப்பாட்டுடன்தான், இன்றும் இருக்கிறேன். இனி சட்ட போராட்டங்களுடன் உங்களோடு துணை நிற்பேன்.
நான் வளர்ச்சியை எதிர்க்கவில்லை. பரந்தூர் மக்களுக்கு எதிராக இந்த இடத்தில் இந்த விமான நிலையம் வேண்டாம் என்றுதான் சொல்லுகின்றேன். ஆண்டுதோறும் சதுப்பு நிலங்களையும் நீர் நிலைகளையும் அழிப்பதால் சென்னை போன்ற மாநகரில் மழையாலும் வெள்ளத்தாலும் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவதை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. உடன் அதுபோன்ற ஆபத்துகள் வருவதற்கு துணை போகும் வகையிலான இத்திட்டத்தை ஆதரிக்கும் அரசு ’மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்’
அரிட்டாப்பட்டியில் டங்சன் திட்டத்தை தடுக்க எடுத்த நிலைப்பாட்டை ஏன் இங்கு எடுக்கவில்லை. பரந்தூர் மக்களும் நம் மக்கள் தான். அவர்களுக்கும் அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். எதிர் கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது, ஆளும் கட்சியானதும் ஆதரவு மறுப்பதுமான நாடகங்களை நடத்தக் கூடாது.
போராட்டக் களத்திலிருக்கும் மக்கள் அவரவர் குலதெய்வ நம்பிக்கையுடன் நானும் இருக்கிறேன். இனி சட்டத்துக்கு உட்பட்டு உங்களில் ஒருவனாக இணைந்திருப்பேன். மீண்டும் உங்கள் ஊரில் உங்களை சந்திக்கிறேன்.
