புதடெல்லியில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்பி. பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். சட்ட மேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டியும் அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியானது.
மேலும், அடுத்த ஆண்டுக்கான காங்கிரசின் செயல் திட்டம் முடிவு, ஒன்றிய பாஜ ஆட்சியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
2வது நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில், ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பேரணி நடைபெற உள்ளது. அதற்கு ‘நவ சத்தியாகிரக சந்திப்பு’ என்று பெயரிட்டுள்ளனர். சமீபத்தில், அரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், அரியானா, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
