மோடியுடனான சந்திப்பின்போது ட்ரம்ப், “2008 மும்பை தாக்குதலுக்கு சதி செய்த தஹாவூர் ரானாவை நாடு கடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் ரானா நீதியின் முன் நிறுத்தப்படுவார்.” என்று கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “2008-ல் இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை நாடு கடத்த உத்தரவிட்ட அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்திய நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்று கூறியுள்ளார்.
F-35 போர் விமானம்:
இந்தியாவுக்கான ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், “இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கவுள்ளது. இந்தியாவுக்கு F35 ஸ்டீல்த் ஃபைட்டர் விமானங்களை வழங்கவுள்ளோம் என்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபரான நாள் தொட்டு இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் உலக நாடுகளை ட்ரம்ப் அதிரவைத்துள்ளார். இந்நிலையில், மோடி – ட்ரம்ப் சந்திப்பின்போது வரி விதிப்புகள் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதென்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி, “இந்தியா – அமெரிக்கா என இருதரப்புக்கும் பலன் தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் எண்ணெய், எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி ஆலோசிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், “இங்கே அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக்குவோம் (MAGA) எனக் கூறியுள்ளார். அதேபோல் நாங்கள் விக்ஷித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற நோக்கில் செயல்படுகிறோம். ட்ரம்ப் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு (MIGA) ‘மேக் இந்தியா கிரேட் அகெய்ன்’ என்று அர்த்தம். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் வளர்ச்சிக்கான மெகா கூட்டணியாக அது அமையும் என்றார். அவருடைய இந்த சுவாரஸ்யப் பேச்சு வரவேற்பைப் பெற்றது.
மோடி – ட்ரம்ப் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ட்ரம்ப், சீனா – இந்தியா எல்லைப் பிரச்சினை குறித்துப் பேசினார். அப்போது அவர், “நான் இந்திய – சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று கவனிக்கிறேன். அங்கே நிகழும் சண்டைகள் ஆபத்தானவை. அதில் நான் ஏதும் உதவி செய்ய வேண்டும் என்றால் உதவத் தயாராக இருக்கிறேன். அங்கு நிகழும் சண்டை நிறுத்தப்பட வேண்டும்.” என்றார்.
