நெல்லை தச்சநல்லூர் பெருமாள் வடக்கு தெருவைச் சேர்ந்த தாணப்பன் (52) என்பவர் பல்வேறு இடங்களில் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்றது, சிசிடி கேமரா பதிவானதை தொடர்ந்து நெல்லை போலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
தாணப்பன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் சமீப காலமாக, வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் தாணப்பன் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
