படுகர் இன தேயிலை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மாதந்தோறும் நிர்ணயிக்கும் விலையை உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி நாளை 23 முதல் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆதரவளிக்கும் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேயிலை உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருக்கிறது.இதனால் மலை கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே ‘மலைவாழ் பழங்குடியின பட்டியல்’ இனத்தவராக அங்கீகரிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினர், தற்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டு – அவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன.
மலை நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கான நோக்கமே இதற்கு காரணம். மலைப்பகுதியில் இருக்கும் நிலங்களை அபகரிக்க அப்பகுதி பழங்குடியினரின் நிலங்களை சட்டப்படி கையகப்படுத்தி அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து, அவர்களின் சலுகைகளை பரிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பழங்குடியினரை மீண்டும் பழகுடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் தனியார் கம்பெனிகளும், 1.50 லட்சம் ஏக்கரில் படுகர் இன மக்களும் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள். சுமார் 5 லட்சம் குடும்பங்கள் தேயிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயம் செய்து சிறுகுறு விவசாயிகளிடம் பச்சை தேயிலை கொள்முதல் செய்து – இன்கோ கூட்டுறவு நிறுவனம் விவசாரிகளை பங்குதாரராக கொண்டு – டீத்தூள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் விலை மறுக்கப்பட்டுகிறது. மூன்று, நான்கு மாதங்கள் வரை காலதாமதமும் ஏற்படுகிறது. இதனால் விவசாயின் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனுக்குடன் அவர்களுக்கான தொகையை விடுவித்து கொள்முதல் தடையில்லாமல் நடைபெற வேண்டிய தேவையை வலியுறுத்தி நாளை 23.12.2024 முதல் தேயிலை பறிப்பு கைவிடும் போராட்டத்தை அம்மக்கள் துவக்க இருக்கிறார்கள். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மற்ற மாநில சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முடிவுகளை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.
எனவே உடனடியாக தீர்வு காணுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மறுத்தால் போராட்டம் தீவிரமடையும். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சென்னையிலும் தலைமைச் செயலகம் நோக்கியும் தீவிர போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. தேவையானால் ஐக்கிய விவசாய சங்கம் அரசியல் சார்பற்ற அமைப்பின் சார்பில் டெல்லி பாராளுமன்றத்திற்கு முன்னாலும் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டத்தை நடத்திட திட்டமிடுவோம் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
