April 29, 2026
MK Stalin x

அமித்ஷாவிற்கு ஸ்டாலின் கண்டனம் image source: facebook.com/MKStalin

Share

நாடாளுமன்ற மக்களவையில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்..” என்று சொல்கிறார்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள். அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், “மநுநீதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு அம்பேதகர் பெயர் கசக்கத்தான் செய்யும்” என கண்டனம் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” என தனது x சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *