சமீபத்தில் மறைந்த வரலாற்று ஆய்வாளரும் இலக்கிய ஆளுமையுமான முனைவர் ஏ. மாரிமுத்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு ஜனவரி 11 ஆம் நாள் செய்யாறில் நிகழ உள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரும் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் ஏ.மாரித்து சென்ற 12-12-2024 அன்று மாரடைப்பால் உயிர் துறந்தார். பேராசிரியர் பல்வேறு சமூக அமைப்புகளில் பங்கேற்று செயல்பாட்டாளராக செயல்பட்டவர். அவரது மறைவு வரலாற்றியல் துறைக்கும் தமிழிலக்கிய பரப்பிற்கும் பேரிழப்பாகும்.
வரும் 11-01-2025 அன்று அவரது படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் நிகழ்வை வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள அவ்வை அரங்கத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவரது படத்தை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற கட்சித் தலைவர் ம.செ.சிந்தனைச்செல்வன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வரலாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.கருணானந்தன், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன், செய்யாறு அரசு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி, வரலாற்றியல் துறைத்தலைவர் பூ.திரிபுரசுந்தரி, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்க புரவலர் கு.இராமகிருஷ்ணன்,ந.பிரகாசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.ஜோதி, எஸ்.எஸ்.பாலாஜி, மு.பாபு, சமூக செயல்பாட்டாளர்களான கே.ஏ.ஜோதிராணி, இரா.ஆதிமொழி, ம.கு.பகலவன், த.ம.பிரகாஷ், எ.குப்பன் (எ) வெற்றிவளவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
