வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா புதன்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கடும் அமளிக்கு இடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம் செய்தார்.
புதிய வருமான வரி மசோதாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது அதிருப்திக்குரிய அம்சங்கள் குறித்தும் பகிர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு சபாநாயகரை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். அந்தக் குழு, புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்.
புதிய வருமான வரியை அறிமுகம் செய்த பின்னர் அது குறித்து எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த பதிவில், “புதிய வருமான வரி மசோதா (2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் மசோதாவின் நகல் காணக் கிடைக்கும். எங்களின் FAQ விளக்கங்கள் பொதுவாக எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
