சென்னையில் இன்று முதல் 12-01-2025 வரை நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இன்று துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். உடன் அமைச்சர் அன்பில்மகேஷ் கலந்துகொண்டார். வளாகத்தின் முகப்பில் அமைந்திருந்த திருவள்ளுவர் சிலையையும் மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. பொதுவாக இக்கண்காட்சி ஆங்கிலம் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் இக்கண்காட்சியில் தனித்தனியே புத்தக அரங்குகளை அமைத்து தங்களின் பதிப்பக நூல்களை காட்சிப்படுத்துவர்.
இப்புத்தகக் கண்காட்சியோடு சேர்த்து மாலை நேரங்களில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பேச்சார்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் தினசரி நடைபெறும். இக்கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான வாசிப்பாளர்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான நூல்களை வாங்கிச் செல்வர்.
