காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து நாளை மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் “மன்மோகன் சிங்கின் உடல் நாளை காலை 8 மணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு 8.30 முதல் 9.30 வரை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு காலை 9.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
