விவசாயப் பெருங்குடி மக்களுக்கான எனது கோரிக்கையுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன் என்று திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி தொகுதி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “பிப்ரவரி 2-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து, பட்டாடை அணிவித்து வரவேற்று, மரியாதை செலுத்தினேன்.
இந்த சந்திப்பை பயன்படுத்திக்கொண்டு, மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு விழுக்காடு செஸ் வரியை நீக்கிட வேண்டும் என்ற விவசாயப் பெருங்குடி மக்களுக்கான எனது கோரிக்கையை கொடுத்து, அதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். முதல்வர் அவர்களும் கனிவோடு கேட்டுக்கொண்டு, பரிசீலிப்பதாகவும் கூறினார்கள். அவரது வார்த்தை எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை வழங்கியது.
இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி ராஜேந்திரன் அவர்களும். தென்மண்டல மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
