காஞ்சிபுரம் அய்யங்கார்குளத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சஞ்சீவிராயர் கோயிலை, புதுப்பிக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
அய்யங்கார்குளத்தில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த, அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு சென்றபோது, அதில் இருந்து ஒரு சிறியபகுதி விழுந்த இடமே இத்தலம் என அறியப்படுகிறது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலின் உபகோயிலான சஞ்சீவிராயர் கோயிலின் மண்டபங்கள், பிரகாரங்கள் உள்ளிட்டவை சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இதனால், கோயிலை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் அரசிடம் நீண்ட காலமாக கோரி வந்தனர்.
எனவே, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் நிதி மூலம் சஞ்சீவிராயர் கோயிலில் உள்ள மண்டபங்கள், விமானம், கருவறை, பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.2.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோயில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
