தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் சவுக்குசங்கர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் குறித்த – அரசின் திட்டத்தை அவதூறாகப் பேசியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இடையில் அவர் ஜாமீன் பெற்றிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது தொடர்பான விசாரணை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதில் சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு நீதிபதி செங்கமல செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே இப்போது புதிய வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்கள், தமிழக அரசு வெளியிட்ட திட்டம் ஆகியவை குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட புகாரில் சவுக்கு சங்கர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சிறைக்குச் சென்ற மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததற்கான நகலைச் சவுக்கு சங்கரிடம் வழங்கியுள்ளனர்.
